பாதாமில் செய்திட்ட பாதுஷாவே
நான்தான் இனியுந்தன் நாதர்ஷாவே !
முந்திரியில் செய்தகுளோப் ஜாமூனே
முறுவலிலே நீதருவாய்முன் ஜாமீனே !
ஜீராவில் மிதக்கின்ற ஜாங்கிரியே
எனக்காக நீயென்றும் ஏங்குறியே !
ஜோராக மிளிரும்பால் கோவாவே
சொந்தமாக நீவரணும் ஏவாளே !
நாமணக்க சுவைதந்த அல்வாவே
நமக்குமினி வாழ்வுண்டோ சொல்வாயே !
பந்தியிலே வைத்திருக்கும் லட்டுநீயே
பசிக்கிறது ஊட்டிவிடு பிட்டுநீயே !
பசும்பாலில் செய்திட்ட பாஸந்தியே
பகலிரவாய் காத்திருக்கேன் வா,சந்தியே !
புதுநெய்யில் செய்திட்ட மைசூர்பாகே
பளபளன்னு மின்னுகின்ற உடல்வாகே !
பொன்னாக சிவந்திருக்கும் அதுரசமே
பூரிக்க வந்திருக்கும் இதழ்ரசமே !
தித்திக்க ஊறிவந்த தேன்குழலே
தினந்தோறும் வரவேண்டும் வான்முகிலே !