தென்றலினைத் தூதுவிட்டு
தேன்தமிழை மோதவிட்ட
அன்றலர்ந்த தாமரையே அழகு அழகு – உன்
அன்னநடையில் எனையிழுத்துப் பழகு பழகு
செவ்விதழைப் பூக்கவைத்து
தேன்சுவையைத் தேக்கிவைத்து
நவரசத்தைக் காட்டுகின்ற உதடு உதடு – அது
நல்வாழ்வில் திறக்கின்ற கதவு கதவு.
பொன்கன்னம் சிவந்திருக்க
புதுவண்ணம் சேர்ந்திருக்க
என்எண்ணம் அதன்மேலே முத்தம் முத்தம் – அது
எழில்வண்ணம் பெறவேண்டும் நித்தம் நித்தம்.
கண்மலர்கள் விழித்திருக்க
கருங்குவளை பழித்திருக்க
என்மனது ஏங்குதடி குயிலே குயிலே – என்
ஏக்கமெல்லாம் தீர்த்துவிடு மயிலே மயிலே.
சந்தனத்தைக் குடைந்தெடுத்து
சங்கீதத்தின் மடைதிறந்து
உந்தனிடை ஆனதுவோ கிளியே கிளியே – அதில்
உறவுகொள்ள துடிப்பதென்ன விழியே விழியே!