தனிமையும் (loneliness) பிறரால் வேண்டப்படாமையுமே (feeling of being unwanted) இன்றைய உலகின் மிகப் பெரிய கொடுமை என்றார் அன்னை திரேசா.

அதே சமயம் தனிமை என்பது மட்டுமே கொடுமையல்ல என்பதும் தனித்து இருப்பது மட்டுமே தனிமையல்ல என்பதும் உண்மைதான்.

நம்மைச் சுற்றி ஆயிரம் நபர்கள் இருக்கும் சூழலிலும் நம்மில் சிலர் தனித்து விடப்படுவதுபோல் உணர்கிறோமே அந்த தனிமைதான் கொடுமையான விஷயம்.

அதுவும் முதுமையில் வரும் தனிமை…. அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் வேதனை.

நானும் என்னுடைய சர்வீசில் சுமார் பத்தாண்டு காலம் என் குடும்பத்தாரை விட்டு தனியாக இருந்திருக்கிறேன்.

மும்பையில் இருந்தபோது தனிமை ஒரு பாரமாக தெரியவில்லை. ஏனெனில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவே இரவு பத்து மணி ஆகிவிடும். அதன் பிறகு எனக்கென எதையாவது சமைத்து உண்டுவிட்டு படுக்கச் செல்லும்போது நள்ளிரவாகிவிடும். நான் மேலாளராக இருந்த கிளையில் வேலைப் பளு அதிகம் என்பதால் வார இறுதி நாட்களில் கூட அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும். ஆகவே தனித்து இருக்கும் சூழல் மிகவும் அரிதாக இருந்தது.

ஆனால் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து கொச்சியில் மீண்டும் தனித்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது தனிமை என்ன வாட்டி எடுத்தது. ஏனெனில் நான் பணியில் இருந்த பயிற்சிக் கல்லூரியில் பணிச்சுமை அவ்வளவாக இல்லை. மேலும் என்னுடைய குடியிருப்பு கல்லூரி கட்டடத்திலேயே இருந்ததாலும் அந்த கட்டிடம் பஜாருக்கு நடுவில் இருந்ததாலும் அண்டை அயலார் என்று யாரும் இருக்கவில்லை. மாலை ஆறு மணிக்கு கல்லூரியிலிருந்து புறப்பட்டால் ஒரு சில நொடிகளில் குடியிருப்பை அடைந்துவிடலாம். அதிலிருந்து அடுத்த நாள் காலை பணிக்குச் செல்லும்வரை தனிமைதான். வார இறுதி நாட்களில் கேட்கவே வேண்டாம். சனிக்கிழமை பகலிலிருந்து திங்கட்கிழமை காலை பத்து மணி வரையிலும் பேச்சு துணைக்குக் கூட ஆள் இருக்காது. வீட்டில் ஒரேயொரு துணை தொலைக் காட்சிப் பெட்டிதான்! எனக்கு இன்னொரு துணையாக இருந்தவை புத்தகங்கள்.  எங்கள் கல்லூரிக்கு எதிரிலேயே ஆங்கில புத்தகங்களை வாடகைக்கு விடும் ஒரு நூலகம் இருந்தது. அங்கு தங்கியிருந்த நான்காண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருப்பேன்.

ஆனாலும் எத்தனை நேரம்தான் படித்துக் கொண்டிருக்க முடியும்? அல்லது தொலைக்காட்சியை பார்க்க முடியும்? சில சமயங்களில் எதிலுமே மனம் செல்லாமல் சென்னையில் இருக்கும் மனைவி மக்களையே மனம் சுற்றி வரும். இப்படியொரு வாழ்க்கை தேவைதானா என்றெல்லாம் தோன்றும். பதவி உயர்வு தேவையில்லை என்று இருந்திருந்தால் ஊரோடு இருந்திருக்கலாமே என்று தோன்றாத நாளே இல்லை எனலாம்.

அப்போதுதான் தனிமையின் தாக்கத்தை முழுவதுமாக உணர ஆரம்பித்தேன்.

இளம் வயதில் தனித்திருப்பது மனத்தளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதுவே முதிய வயதில் தாங்கொண்ணா துன்பமாக தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் சென்னையில் ஒரு பலமாடி குடியிருப்பில் வசித்தபோது என்னுடைய குடியிருப்புக்கு எதிரில் ஒரு முதிர்ந்த தம்பதி குடியிருந்தனர். கனவருக்கு எண்பது வயதும் அவருடைய மனைவிக்கு எழுபத்தைந்து வயதும் இருக்கும். அவர்களுடன் அவருடைய மகனும் மருமகளும் ஒரு பேரனும் இருந்தனர். சில மாதங்களில் ஏதோ குடும்பத்தகராறில் மகன் தன் மனைவி மற்றும் மகனுடன் அவர்களை விட்டு பிரிந்து செல்ல தம்பதியினர் தனித்து விடப்பட்டனர்.  அந்த பிரிவே அவர்கள் இருவரையும் நோயில் தள்ளியது. அடுத்த ஆறு மாதத்தில் மனைவி மாரடைப்பால் மரித்துவிட மகனும் மகளும் திரும்பி வந்து தந்தையுடன் வசித்தனர். ஆனால் ஒரு சில மாதங்கள்தான். மீண்டும் பிரச்சினை. தள்ளாத வயதிலிருந்த தந்தையை மீண்டும் தனியே விட்டுவிட்டு மகன் சென்றுவிட முதியவர் தனிமையின் துயரம் தாளாமல் பல சமயங்களில் அழுவதை கேட்க முடிந்தது. மகன் மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வார். ஆனாலும் முதியவரால் தனிமையின் பாரத்தை தாங்க முடியவில்லை. ஓரிரு மாதங்கள் கழித்து ஒருநாள் இரவு உறக்கத்திலேயே மரித்துப் போனார். அவர் மரித்த விவரமே இரண்டு தினங்கள் கழித்துத்தான் எங்களுக்குத் தெரிந்தது.

இதுதான் தனிமையின் விளைவு.

இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேறிய பல நாடுகளிலும் இதே பிரச்சினைதானாம்.

இங்கிலாந்தில் எழுபத்தைந்து வயதைக் கடந்த பலரும் இன்று தனிமையில்தான் வாடுகின்றனராம். தொலைக்காட்சி பெட்டி ஒன்றுதான் அவர்களுக்கு துணையாக உள்ளதாம்.

இந்த தனிமை நகர்ப்புறங்களில்தான் அதிகம். இதற்கு வளர்ந்துவரும் நாகரீகமும், நம்முடைய வாழ்க்கை முறையுமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

தனிமை என்பதும் தனித்துவிடப்படுதல் என்பதும் வெவ்வேறு.

நண்பர்கள் புடைசூழ இருக்கும் சூழல்களிலும் நம்மில் சிலர் தனித்துவிடப்பட்டுவிட்டதைப் போல் உணர்வதுண்டு. நானும் அதுபோல் உணர்ந்திருந்திருக்கிறேன். அதற்கு நம்முடைய அணுகு முறையும் ஒரு காரணம். நம்மில் சிலர் யாரையும் சட்டென்று நண்பர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. பிறரிடம் நாமாக சென்று பேசுவதில்லை. யாராவது வந்து நம்மிடம் பேசினால் நாமும் பதிலுக்கு பேசுவோம். அதுவும் அளவோடு. நானும் ஒருவகையில் அப்படித்தான். கொச்சியில் நான் குடியிருந்த கட்டிடத்திலேயே பல அலுவலகங்கள் இருந்தன. அதில் இயங்கிவந்த சில முக்கிய இலாக்கா அதிகாரிகளும் என்னைப் போலவே அதே கட்டிடத்தில்தான் தங்கள் குடும்பத்துடன் குடியிருந்தனர். ஆனாலும் என்னால் அவர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. எங்களுக்குள் மொழி பேதம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில் எனக்கும் மலையாளம் நன்றாக பேச வரும். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம். ஒதுங்கியே இருப்பேன். அவர்களாக வந்து பேசினால் பேசுவேன்.

இந்த மனநிலையிலுள்ளவர்கள்தான் தாங்கள் தனித்துவிடப்பட்டிருப்பதாக உணர்வார்கள் போலுள்ளது. இத்தகையோர் ஒரு கூட்டத்தில் இருந்தால் இவர்களுடைய மனநிலை அவருடன் இருப்பவர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது யாரும் உடன் இல்லாவிட்டால்தான் தனிமையாக தோன்றும் என்றில்லை.

அதே சமயம் தனிமையில் இருப்பவர்கள் அனைவரும் தனிமையாக உணர்வார்கள் என்றும் இல்லை. தனிமையில்  இருப்பதை விரும்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக படைப்பாளிகள், ஓவியர்கள், இசைக் கலைஞர்கள்…. இவர்களுக்கு தனிமையில்தான் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தோன்றுமாம்.

உண்மைதான். சிறையில் இருந்த காலத்தில்தானே நேரு, அண்ணா போன்றவர்கள் தங்களுடைய மிகச் சிறந்த படைப்புகளை படைத்திருக்கின்றனர்!

ஆக தனிமை என்பது நோயல்ல. அதாவது தனிமையிலும் இன்பம் காண்கின்ற மனப்பாங்கு உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல.

ஆனால் நண்பர்கள், உற்றார் உறவினர் தங்களைச் சுற்றிலும் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் தனித்து விடப்படும்போது அதாவது அவர்கள் பிறரால் வேண்டப்படாதவர்களாக கருதப்படும்போது அது அவர்களுடைய உயிரையே குடிக்கும் அளவுக்கு வேதனையாக மாறிவிடுகிறது.

“Loneliness has also been described as social pain — a psychological mechanism meant to alert an individual of isolation and motivate him/her to seek social connections.” என்கிறது ஒரு ஆய்வுக் கட்டுரை.

அதாவது தனிமை ஒரு சமுதாயம் ஒருவருக்கு அளிக்கும் துன்பம் என்றும் கூறலாமாம். ஒருவர் தன்னை சார்ந்தவர்களால் வேண்டுமென்றே தனிமைப் படுத்தப்படும்போது சம்மந்தப்பட்டவரால் அதை எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதாம். தனிமையின் துயரம் வயது ஆக, ஆக கூடிக்கொண்டே போகிறதாம்.

தனிமை என்பது மனிதனுக்கு புதிதல்ல. அவன் இவ்வுலகில் வரும்போதும் தனியாகத்தான் வருகிறான். உலகை விட்டு பிரியும்போதும் தனியாகத்தான் செல்கிறான். இதை உணர்ந்துக்கொள்பவர்களுக்கு தனிமை பழகிப்போய்விடும் என்கிறது இன்னொரு ஆய்வு.

தனிமையிலே இனிமைக் காண முடியுமா என்றார் கண்ணதாசன். அது இரவினிலே சூரியனைக் காண நினைப்பதுபோலத்தான் என்கிறார்.

இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம் தனிமையை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை. ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நாம் அனைவருமே தனிமையை தனியாக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது நிச்சயம். ஆகவே அதை எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த தனிமை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். தினசரி அலுவகள் ஏதும் இல்லாத சூழல் மட்டுமல்லாமல் வளர்ந்துவிட்ட குழந்தைகள் தங்களுடன் இல்லை என்கிற உணர்வும் இத்தகைய உணர்வுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுதான் வாழ்க்கை, இதுதான் நிதர்சனம் என்று ஏற்றுக்கொள்கிறவர்கள் தங்களுடைய சிந்தனைகளை பல ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்தி தனிமையை எதிர்கொள்கின்றனர். ஆனால் நட்பு, சுற்றம், சூழல் என்று கலகலப்பாக இருந்து பழகிப் போனவர்களால் அதை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை.

இத்தகையோர் நட்பும் சொந்தமும் நம்முடைய வாழ்வின் இறுதிவரையிலும் உடன் வருவதில்லை என்கிற யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். தனிமை என்பது பிறரால் ஏற்படுவதல்ல. நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது என்பதையும் உணர வேண்டும். கடமைகளை செவ்வனே செய்து முடித்துவிட்ட நிம்மதியை தனிமையில்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். கடந்த கால சுகமான நினைவுகளை அசைபோடுவதே தனிமையை முறியடிக்க உதவும் நல்லதொரு ஆயுதம். அதை யாரும் நமக்கு மறுக்க முடியாதே.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »